தொடர்ந்து தோல்விப் படங்களில் நடித்து வந்த ப்ரியா ஆனந்த், எதிர்நீச்சல் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராசியான நாயகியாகிவிட்டார். எதிர்நீச்சல் படம் ஹிட்டானதால் அதில் நாயகியாக நடித்த பிரியா ஆனந்த் சம்பளத்தை ரூ.1 கோடி உயர்த்தி விட்டதாக செய்திகள் வெளியாகின.
புதுப்படங்களுக்கு கால்ஷீட் கேட்டு வருபவர்களிடம் ரூ.1 கோடி வைத்தால்தான் நடிப்பேன் என்கிறாராம். இப்போதைக்கு நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, அமலா பால் மற்றும் அஞ்சலி ஆகியோர் 1 கோடி சம்பளம் வாங்குவோர் க்ளப்பில் உள்ளனர்.
இந்த நடிகைகள் பட்டியலில் தற்போது பிரியா ஆனந்தும் சேர்ந்துவிட்டார் என்றனர். ஒரே ஒரு படம் ஓடியதற்கே இப்படியா என அவர் மீது புகார்ப் பட்டியல் வாசிக்கத் தொடங்கினர் சில தயாரிப்பாளர்கள்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், "திறமைக்கேற்பத்தான் யாரும் சம்பளம் தருவார்கள். அதுவும் சினிமாவில் ஆதாயமில்லாமல் யாரும் செயல்பட மாட்டார்கள். இப்போது நான் சில பெரிய படங்களில் நடித்து வருகிறேன். அதற்கேற்ப சம்பளம் வாங்குகிறேன்.
ஆனால் இன்னும் ரூ 1 கோடி வாங்கும் ரேஞ்சுக்குப் போகவில்லை. அந்தக் க்ளப்பில் சேர இன்னும் சிறிது நாளாகும் என நம்புகிறேன்," என்றார்.